தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்கள்: சுகாதார செயலர் தகவல்
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சென்னையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் கிட்டத்தட்ட 2000ஐ நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் தனிமைப்படுத்த முகாம்கள் திறக்கப்படுவது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில் அதில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்த உடன் தனிமைப்படுத்தப்பட்டு மையங்கள் மூடப்பட்டன.
இதுகுறித்து அவர் கூறியபோது ’சென்னை முழுவதும் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் 15 தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன என்றும் கொரோனா அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலை என்பதை நாங்கள் மறுக்கவில்லை என்றும் பாதிப்பு அதிகம் ஆகிறது என்பது உண்மைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக கூச்சப்படாமல் வெட்கபடாமல் அரசு மருத்துவமனை சென்று சோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்றும் அது தான் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.