தமிழ்நாடு
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கென்யா மாணவர் சென்னை புழல் சிறையில் அடைப்பு!
சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது.
சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த 27 வயதான எரிக் என்ற மாணவர் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்துவந்தார். அவருடன் கென்யாவை சேர்ந்த 22 வயதான மாணவி ஒருவரும் பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கல்லூரிக்கு அருகில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்த மாணவியும், எரிக்கும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் இரவு மாணவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற எரிக் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 2016-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
கென்யா மாணவர் எரிக்கிற்கு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்கார குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி வெளிநாட்டு மாணவர் என்பதால் அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.