இந்தியா
கொரோனாவைக் கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி: அமெரிக்கா, இந்தியாவுக்கு கறார் அட்வைஸ்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடும் நிலையில், அமெரிக்க அரசைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகரான மருத்துவர் ஆந்தோனி ஃபவுசி, இந்தியாவுக்கு கறார் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இப்போதைக்கு இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி, அடுத்து வரும் வாரங்களுக்கு முழு ஊரடங்கு போடுவது மட்டும் தான் என்று அவர் கூறியுள்ளார்.
இன்று மட்டும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை உலக அளவில், ஒரே நாட்டில் இத்தனை பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இப்படி நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தடை உத்தரவுகளையும் விதிமுறைகளையும் அமல் செய்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் ஃபவுசி, ‘நான் இந்தியா முழுமைக்கும் லாக்டவுன் போடப்பட வேண்டும் என்று சொல்லும் போது, 6 மாதங்களுக்கு அது நீடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், குறிப்பிட்ட சில காலத்துக்கு அது அவசியமாகும். அதற்குள் நம்மால் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்’ என்று கூறியுள்ளார்.
பலரும் நாட்டில் லாக்டவுன் அவசியம் என்று சொல்லி வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்த முடிவை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகின்றன.