கிரிக்கெட்
கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சாம்கரண்: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
![Sam - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Sam.jpg)
நடப்பு ஐபிஎல் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரில் சாம்கரணின் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.
![Ellis - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Ellis-1024x683.jpg)
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் ஜஸன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கைகொடுக்கவில்லை. இருந்தாலும் மற்ற வீரர்களின் பங்களிப்பால் அந்த அணி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. வெற்றி இலைக்கை அந்த அணி அடைய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடக்கூடிய ஹெட்மேயர் மற்றும் துருவ் ஜுரேல் களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவரை வீச சாம்கரணை அழைத்தார் பஞ்சாப் கேப்டன். முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் கொடுத்து ஹெட்மேயர் விக்கெட்டை எடுத்தார் சாம்கரண். இதனையடுத்து அடுத்த மூன்று பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் கடைசி மூன்று பந்துகளில் அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.