இந்தியா
‘புதுச்சேரி அரசு ராஜினாமா இல்லை, பெரும்பான்மை உள்ளது’- முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்
புதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சமீபத்தில் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இன்று மற்றுமொரு எம்.எல்.ஏ சிவக்கொழுந்து காலையிலேயே சபாநாயகர் வீட்டுக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து விலகலை உறுதி செய்தார்.
இதனால், ஒரே நேரத்தில் நான்கு எம்.எல்.ஏ-க்களை இழந்த நாராயணசாமியின் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என செய்திகள் உலா வரத் தொடங்கின. மீண்டும் எம்.எல்.ஏ கந்தசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா கொடுத்து ஆட்சியைக் களைக்கப் போவதாகக் கூறியதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் தற்போது முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படாது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது. இதனால் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். இந்திய அரசியல் சாசணத்துக்கு உட்பட்டு புதுச்சேரி அரசு செயல்படும்” எனத் தீர்மானமாக அறிவித்துள்ளார்.