தமிழ்நாடு
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடாங்கப்பட்டன. இளங்கலை, முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந் தேதி முதல் தொங்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோர்களும் மாணவர்களும் ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில், புதுவையில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.