தமிழ்நாடு
ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி: அடுத்தது என்ன?
புதுவையில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து சற்றுமுன் தெரிவித்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சில நிமிடங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.
அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் முதல்வர் நாராயணசாமி அளித்தார். இந்த நிலையில் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி ’புதுவையில் எங்களது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளேன். தங்களுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் புதுவையை அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து விரைவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
புதுவையில் நான்கரை ஆண்டுகளாக நடந்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.