தமிழ்நாடு
புதுவை முதல்வருக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி!
![rangasamy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/rangasamy.jpg)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை பார்த்து வருகிறோம். இந்தியாவில் தினசரி சுமார் 4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தமிழகத்தில் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அவ்வப்போது கொரோனாவால் பாதித்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக மாநில முதலமைச்சர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் தற்போது நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் புதுவை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ரங்கசாமி உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.