தமிழ்நாடு
கலை அறிவியல் கல்லூரிக்கும் நுழைவுத்தேர்வா? ஏஐசிடிஇ தலைவர் விளக்கம்
மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் படிப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக நீட் என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வரும் ஆண்டு முதல் நர்ஸ் உள்ளிட்ட சில படிப்புகளுக்கும் நீட் தேர்வு உண்டு என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கொந்தளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கலை மற்றும் அறிவியல் உயர் படிப்புகளுக்கும், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கும் இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மேலும் அச்சம் ஏற்பட்டது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் கலை அறிவியல் உயர் கல்வி படிப்புக்கும், பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு வருமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும் ஆனால் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளதால் வெகு விரைவில் கலை அறிவியல் உயர் படிப்பிற்கும் பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு வர வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.