இந்தியா
தடுப்பூசி போட்டுக் கொள்ள வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு: மத்திய அமைச்சர் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிப்பு அடைந்து பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களை கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தனது தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனுப்பி வருகிறது என்பதும் மாநில அரசுகள் மாவட்டங்களுக்கு அதனை பிரித்து அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலங்களின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிக்கு என கட்டணம் பெறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிலருக்கு சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். எனவே இனிமேல் தடுப்பூசி செய்துகொள்ள இணைய தளங்களை தேடி அலைய வேண்டியதில்லை என்றும் நமது செல்போனில் இருந்து வாட்ஸ் அப் மூலம் 9013151515 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பி முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.