தமிழ்நாடு
6-ஆம் வகுப்பு மாணவியை வா பழகலாம்… என அழைத்த 28 வயது இளைஞருக்கு தர்ம அடி!
சென்னை அண்ணா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவியை இடைமறித்து வா பழகலாம் என கையை பிடித்து இழுத்து அழைத்த 28 வயதான இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா நகரில் அரசு பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பிந்தொடர்ந்து வந்த 28 வயது இளைஞன் வழிமறித்து கையை பிடித்து இழுத்து வா பழகலா என வற்புறுத்தியுள்ளான். அப்போது சிறுமியை அழைத்துச்செல்ல ஆட்டோவில் வந்த சிறுமியின் தந்தை இந்த சம்பவத்தை பார்த்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அந்த இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்களும் அந்த இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த இளைஞன் பல நாட்களாக சிறுமியை பிந்தொடர்ந்து சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்டு வழிமறித்து வா பழகலாம் என தொந்தரவு செய்துள்ளான்.