தமிழ்நாடு
லண்டனில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாற்று வழியில் தப்பிய முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.
நேற்று தனது பயணத்தை ஆரம்பித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். சென்னையில் இருந்து லண்டன் சென்ற அவர்களை வரவேற்க சிலர் காத்திருந்தனர். ஆனால் அப்போது விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்த சிலர் அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த அவர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது போன்றவற்றை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக அமைதி வழி கருத்து பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கடைசி வரையில் பயணிகள் வெளியேறும் வழியில் முதல்வர் வரவில்லை. முதல்வரும், அமைச்சர் விஜயபாஸ்கரும் வேறு வழியில் சென்றனர்.