இந்தியா
பிரியங்கா காந்தியின் சாயல் பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்: தேவகவுடா!
பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல்கள் உள்ளன, இது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரு ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக சமீபத்தில் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார். தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த பிரியங்கா காந்தியை நீண்ட நாட்களாக பலரும் அரசியலுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இதனைச் சமாளிக்க பிரியங்கா காந்தி தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கும் இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா காந்தி அங்கு சென்று பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தி இந்து ஊடகத்துக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம், பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், ராகுல் காந்தியைவிட பிரியங்கா காந்தி சிறப்பாகச் செயல்படுவார். பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல்கள் உள்ளன, இது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இது நிச்சயம் காங்கிரஸுக்குப் பலன் தரும். பிரியங்காவின் வருகை காங்கிரஸுக்கு உதவிகரமாக இருந்தால், அதில் மகிழ்ச்சியடையும் நபராக நான் இருப்பேன் என கூறியுள்ளார்.