இந்தியா
பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் சி.பி.எஸ்.இ.: ப்ரியங்கா காந்தி கண்டனம்!
சிபிஎஸ்இ அமைப்பு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து கூறிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த சிபிஎஸ்சி வழக்கம்போல் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சிபிஎஸ்சி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகமாகி உள்ள சூழலில் மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது சிபிஎஸ்இ போன்ற அமைப்பின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது என்றும் இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் திட்டமிட்டுள்ள தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.