சினிமா செய்திகள்
தளபதி விஜய்-யிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்- சுயசரிதையில் பிரியங்கா சோப்ரா!
இன்று ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா எளிமையை தளபதி விஜய் இடமிருந்து கற்றுக்கொண்டதாகத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
கோலிவுட்-ல் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா அடுத்தடுத்து பாலிவுட், ஹாலிவுட் என இன்று ஒரு சர்வதேச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் பிரியங்கா. இந்தியப் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருபவர் தற்போது தனது சுயசரிதையை எழுதி உள்ளார்.
Unfinished எனப் பெயரிடப்பட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ராவின் சுயசரிதை அவரது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது. தனது வாழ்க்கையின் பல அங்கங்களையும் விவரித்துள்ள பிரியங்கா தனது முதல் ஹீரோவான தளபதி விஜய் குறித்தும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா குறிப்பிட்டுள்ளபடி, ‘நான் அழகிப் பட்டம் வென்ற 2000-ம் ஆண்டிலேயே சினிமாத் துறையிலும் கால் பதித்துவிட்டேன். எனது முதல் படமான தமிழன் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தேன்.
அந்தப் படத்தில் நடித்த போது தான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. மிகவும் எளிமையானவராக இருப்பார் விஜய். ரசிகர்களிடம் மிகவும் எளிமையாகப் பழகுவார். ரசிகர்களுடன் நட்பாகப் பழக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்ததே விஜய் தான். நான் நியூயார்க்கில் இன்றும் படப்பிடிப்புகளில் ரசிகர்கள் புகைப்படம் கேட்டால் எளிமையாக சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். இதைக் கற்றுக்கொடுத்தது விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.