தமிழ்நாடு
ரூ.700 கோடி மோசடி செய்த தனியார் பஸ் உரிமையாளர்: மக்கள் திருந்தவே மாட்டார்களா?
தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதிக வட்டி தருவதாக கூறி ரூ 500 கோடி வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் நடத்திவரும் கமாலுதீன் என்பவர் பேருந்து தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக அளவு பங்கு தருவதாகவும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,000 ரூபாயும் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் வரையும் பங்கு தொகையை தருவதாக கூறியிருந்தார்.
இதனை அடுத்து அவரிடம் ஏராளமான ஒரு லட்சம் முதல் பெரிய தொகையை பலர் முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் சரியாக பங்கு தொகையை அவர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் அவரால் பங்கு தொகையை கொடுக்க முடியவில்லை. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் கமாலுதீன் மனைவி மற்றும் அவரது வாரிசுதாரர்கள் கமாலுதீன் வாங்கிய டெபாசிட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதால் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கமாலுதீன் மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தில் வெளிநாட்டில் நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், மகன் பெயரில் பள்ளிக்கூடம் என ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரூபாய் 400 கோடியும் வெளிநாட்டில் இருந்து பெற்ற முதலீட்டையும் சேர்த்தால் ரூபாய் 700 கோடிக்கும் மேல் அவர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். தங்களுடைய பணத்தை திரும்பப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தால் பணம் பறி போய் விட அதிக வாய்ப்பு இருப்பதாக ஏராளமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் இந்த நிகழ்ச்சியிலிருந்து தெரியவருகிறது.