கிரிக்கெட்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: இருமல் மருந்தால் நேர்ந்த விபரீதம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்வி ஷா ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, அதில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்தாக் அலி கோப்பையில் பங்கேற்ற இளம் வீரர் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பலகட்ட சோதனைகளை நடத்திய மும்பை கிரிக்கெட் சங்கம் பிரித்வி ஷா ஊக்கமருந்து உட்கொண்டதை உறுதி செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது.
இதனையடுத்து பிரித்வி ஷா 8 மாதங்கள் வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள பிரித்வி ஷா, என் விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
முஸ்தாக் அலி கோப்பைக்கான தொடரில் நான் மும்பை அணிக்காக விளையாடிய போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது நான் எடுத்துக்கொண்ட இருமல் சிரப்பில் தான் தடைசெய்யப்பட்ட வேதிபொருள் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மருந்தை உட்கொண்டதால் தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு மிகவும் கவனமுடன் செயல்படுவேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, இந்திய அணிக்காக விளையாடுவதை தவிர எனக்கு எந்த பெருமையும் இல்லை. விரைவில் இந்த சூழலில் இருந்து மீள்வேன் என தெரிவித்துள்ளார்.