இந்தியா
சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி: ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னைக்கு வர இருப்பதனால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படைத் தலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.. கண்காணிப்பு வளையத்தில் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவைகளில் பலத்த சோதனை ஏற்படுத்தியுள்ளனர். சென்னைப் பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அவரை வரவேற்பதற்காக ஐந்தடுக்கு பாதுகாப்புகளை தமிழ்நாடு காவல்துறை ஏற்பாடு செய்துருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
வந்தே பாரத் இரயில்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு இரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அதன் பிறகு பல்லாவரத்தில் இருக்கும் மைதானத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை சென்னைக்கு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ஐந்தடுக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.