தமிழ்நாடு
நாடகம் நடத்தும் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
அதானி விவகாரத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு அந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடியை எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டாமாக விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் இன்று கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசிவிட்டு, பிரதமர் மோடி குறித்து பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
டி.ஆர்.பாலு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. சேது சமுத்தி திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு பேசினால் அதற்கும் பதில் இல்லை. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை, வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்றார்கள். 15 ரூபாயாவது தந்தார்களா? மோடியின் வாக்குறுதிகள் என்ன ஆனது?
ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்க பாண்டியன் என நமது எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. இப்படிப்பட்ட ஆட்சிதான் இன்றைக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது என காட்டமாக விமர்சித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.