இந்தியா
காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 முதல் செயல்படத் தொடங்கும்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக உத்தரவிட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனையடுத்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது மத்திய அரசு.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அங்கு சூழ்நிலையை பொறுத்து படிப்படியாக 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் கல்வீச்சு உட்படப் போராட்டங்களை ஒடுக்க காவல்துறையும், பாதுகாப்பு படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் அங்கு செல்ல முயன்ற அரசியல் தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டு டெல்லி அனுப்பப்பட்டதால் அங்கு இன்னும் பதற்றம் குறையவில்லை. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.