தமிழ்நாடு
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்!
சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும். அப்போது அதே பெட்டியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன் என்பவரும் பயணம் செய்துள்ளார். 65 வயதான இவர் கர்ப்பிணி பெண் படுத்திருந்த இருக்கைக்கு மேல் உள்ள இருக்கையில் படுத்து இருந்தார்.
நள்ளிரவில் அந்த பெண் தூங்கிய பின்னர் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து ரயில் சேலம் வந்தபோது ரயில்வே காவல்துறையிடம் அந்த பெண் திமுக பிரமுகர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். ஆனால் பணியில் இருந்த காவலர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.
ஆனால் கோவை சென்ற பின்னர் அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கோவை ரயில்வே காவல்துறையில் புகார் அளித்தார். அவர்கள் சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்து அந்த பெண்ணின் கணவரை சேலத்துக்கு வரவழைத்து மீண்டும் எழுத்துப்பூர்வமாக புகாரை வாங்கிக்கொண்டு திமுக பிரமுகர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் சந்திரனை ரயில்வே காவலர்கள் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சமாதானம் பேசி அனுப்பி வைத்த காவலரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ரயில்வே எஸ்பி.