சினிமா
இந்த பொறந்தநாளைக்கும் பிரசாந்தின் ‘அந்தகன்’ வெளியாகலையே.. என்ன விஷயம்?
டாப் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா மற்றும் தபு நடிப்பில் வெளியான அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அந்த ஆண்டு வெளியான ராட்சசன் படத்தை விட அந்தாதுன் படத்துக்குத் தான் ஐஎம்டிபியில் முதலிடம் கிடைத்தது. அப்படி என்ன படம் அது என பார்த்த பிரசாந்தின் அப்பா தியாகராஜன் உடனடியாக தனது மகனுக்காக அந்த படத்தின் ரீமேக் உரிமையை 2019ல் கைப்பற்றினார்.
ரீமேக் படங்களை கச்சிதமாக இயக்கிக் கொடுக்கும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவை வைத்து அந்த படத்தை இயக்கலாம் என நினைத்தார். ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே அய்யா சாமி ஆளைவிடுங்க என மோகன் ராஜா படத்தில் இருந்து விலகினார்.
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே. ஜே. பிரெட்ரிக்கை வைத்து அந்தகன் என்கிற டைட்டிலை எல்லாம் ரெடி செய்து விட்டு ஷூட்டிங் போன இடத்தில் என்ன பஞ்சாயத்து ஆனதோ தெரியவில்லை. அந்த இயக்குநரும் இதற்கு மேல் இந்த படத்தை நான் இயக்கவில்லை என எஸ்கேப் ஆக, என் மகனுக்காக அந்த படத்தை நானே இயக்குகிறேன். அந்த காலத்துல நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா என இந்த வயதிலும் மகனுக்காக இயக்குநர் அவதாரம் எடுத்தார் தியாகராஜன்.
பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை புக் செய்தும், வில்லியாக சிம்ரனை நடிக்க வைத்தும் அந்தகன் படத்தை இயக்கினார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. இந்த பிறந்தநாளில் கூட அந்தகன் படம் வெளியாகவில்லை. அந்தாதூன் மலையாள ரீமேக் பிரம்மம் எனும் பெயரில் பிருத்விராஜ், ராஷி கன்னா நடித்து வெளியாகி ஹிட் ஆனது.
தமிழில் இந்த ஆண்டுக்குள் அந்தகன் படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.