இந்தியா
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: விழாவை புறக்கணித்த ராகுல், சோனியா!
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
ஜனவரி 23-ஆம் தேதியே பாரத ரத்னா விருது பெறுவோரின் பெயர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அந்த பட்டியலில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக நிறுவனர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் பூபேன் அசாரிகா ஆகியோர் பெயர்கள் இருந்தன.
இந்நிலையில் இந்த விருதகளை வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விருதை பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை நடத்தினார். வெளியுறவுத்துறை, நிதித்துறை என முக்கிய அமைச்சர் பொறுப்புக்களில் காங்கிரஸ் அரசில் பதவி வகித்தவர். இறுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு குடியரசுத் தலைவராக பணியாற்றினார். ஆனால் அதன் பின்னர் பிரணாப் முகர்ஜி பாஜக உடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விருது விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.