இந்தியா
மோடி ஒளிந்துகொண்டிருக்கிறார்: ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!
அரசியல் குறித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராகவும் பேசி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிரகாஷ் ராஜ், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜிடம் ரஃபேல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது ஒரு பெண் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், ரஃபேல் விவகாரத்தில் மோடி இதுவரை நேரடியாகப் பதிலளிக்காமல் இருக்கிறார். இது பிரதமர் மோடி உண்மையிலேயே ஒளிந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி, பெண்களுக்கு எதிரானவர் அல்ல. சமீபத்தில் திருநங்கைக்கு கூட காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கியுள்ளார். அதையும் நாம் பார்க்க வேண்டும் என்றார்.