தமிழ்நாடு
அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே: போஸ்டரால் பரபரப்பு!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலை புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல் கொடுத்தார் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. இதற்கு ஆதரவும் எழும்ப அதிமுகவில் கலகம் தொடங்கியது. இந்த சூழலில் இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அதிமுக தலைமைகள். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி மற்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்படவே இல்லை எனவும், அதுகுறித்த எந்த குரலும் எழும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான போஸ்டர் ஒன்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே… இதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டர் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில், இன்று காலை அதிமுகவின் 68-வது வட்ட உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் ஆறுமுகம் என்பவரால் வைக்கப்பட்டுள்ளது.