இந்தியா
நடந்து முடிந்த அஞ்சல் தேர்வு ரத்து: தமிழக எம்பிக்களுக்கு அடிபணிந்தது மத்திய அரசு!
கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடியும் என அஞ்சல் துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அஞ்சல் தேர்வை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஞாயிற்று கிழமை அஞ்சல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையிலும், மக்களவையிலும் இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் இது தொடர்பாக விவாதம் நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டனர் தமிழக எம்பிக்கள். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது விளக்கம் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஞாயிற்று கிழமை நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் தேர்வானது விரைவில் மீண்டும் நடத்தப்படும். அப்போது இந்த தேர்வானது தமிழ் மட்டுமல்லாமல் இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக எம்பிக்கள் மக்களவையில் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.