தமிழ்நாடு
ஆபாசமாக இருக்கும் வீடியோ: விசாரணை நடத்த இளம்பெண் கோரிக்கை!
தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
23 வயதான பெண் பொறியாளர் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பொறியியல் படித்துள்ள நானும் அத்திக்கோம்பை சேர்ந்த ஒருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தோம்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் சென்னைக்கு வந்து எங்கள் 2 பேரையும் அடித்து உதைத்து அத்திக்கோம்பைக்கு காரில் வைத்து கடத்தி வந்து என்னை ஒரு வீட்டில் தனியாக அடைத்து வைத்து கடுமையாக தாக்கி எனது கணவரை என்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக எனது தாய் ஒட்டன்சத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீசார் எனது கணவரின் குடும்பத்தை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நான் வேறு ஒருவருடன் ஆபாசமாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை காண்பித்தனர். இதுபற்றி விசாரணை நடத்த நான் கூறினேன், ஆனால் போலீசார் விசாரணை நடத்தவில்லை. எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.
அந்த ஆபாச வீடியோவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய உள்ளதாக கணவரின் பெற்றோர் மிரட்டல் விடுகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.