தமிழ்நாடு
குமரி மாவட்டத்தை சிங்கப்பூராக மாற்றுவேன்- சொல்கிறார் பொன்னார்!
அதிமுக கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளராக களம் காண்கிறார் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன். முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்னார், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸின் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். பொன்னாரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் வசந்தகுமாரின் மகன் வசந்த் ரவி நிற்கிறார். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போது அவர், ‘நான் இந்தத் தொகுதியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தை சிறிய சிங்கப்பூராக மாற்றுவேன்’ என்று உறுதியளித்தார்.
முன்னதாக கன்னியாகுமரி தொகுதிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அமித்ஷா, பொன்னாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், ‘பொன்னாரின் சேவை டெல்லியில் தேவைப்படுகிறது. அதனால் அவரை மீண்டும் இந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யுங்கள்’ என்று செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்தார்.