தமிழ்நாடு
அதிமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை: பொன்னார் ஆவேசம்!
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் பிசியாகி விட்டன. தமிழகத்தில் இன்னுமும் கூட்டணி குறித்து பிரதான கட்சிகள் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதனால் பல அதிகாரப்பூர்வமற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது.
குறிப்பாக அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி குறித்து பல தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது. பாஜக அதிமுகவை கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும், மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பேசப்படுகிறது. மேலும் அதிமுக தரப்பு பாஜக கூட்டணிக்கு விருப்பம் இல்லாததை தம்பிதுரையின் பேட்டிகள் உணர்த்துகின்றன.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கூட்டணி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கூட்டணி தொடர்பாக நாங்கள் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. மறைமுகமாக பேச வேண்டிய தேவையும் பாஜகவுக்கு இல்லை. அப்படி இருக்கும்போது, அதிமுகவிடம் இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பதாக கூறுவது எப்படி என்று கேள்வி எழுப்பினார் பொன்னார்.
மேலும், கூட்டணி தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவருடைய கருத்து. அவர் கூறியதில் தவறில்லை. கூட்டணி குறித்து பாஜக மேலிடம் முடிவு செய்யும் என்றார்.