சினிமா செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் – நடிகர்கள் சங்கம் கண்டனம்
நிர்பயாவின் பாலியல் வன்கொடுமை செய்திக்கு தேசமே ஒன்றுக்கூடி கண்டனக் குரல் கொடுத்தது. ஆனால், தேசிய மீடியாவின் அலட்சியத்தால், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் இன்னமும் எதிரொலிக்காமல் உள்ளதற்கு ஐகோர்ட் நீதிபதிகளே கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வீடியோ பதிவாகவும், பதிவாகவும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், தென்னிந்திய நடிகர்கள் சார்பாக ஒரு கண்டன அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அதில், 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆசை வலையில் விழவைத்து ஆபாசமாக படமெடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள், எந்தவித பொறுப்பில் இருந்தாலும், எவ்வளவு பெரிய இடத்துப் பிள்ளைகளாயிருந்தாலும், அனைவருக்கும் உரிய தண்டனையை காவல்துறை நேர்மையாக நடவடிக்கை எடுத்து பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியால், அதில் கிடைக்கும் பல செயலிகள் மூலம், இளைஞர்களுக்கு பல ஆபத்துகள் நிகழ்வதை தடுக்க வேண்டும். வளரும் இளம் பருவத்தினர், தங்களது பெற்றவர்களுக்கு தெரியாமல், யாருடனும் நட்பு பாராட்டக்கூடாது என்றும், தெரியாதவர்களின் பழகுவதால், நேரும் விளைவுகள் மிகவும் மோசமாக மாறி வரும் சூழலில், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.