தமிழ்நாடு
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உறுதி: பொள்ளாச்சி ஜெயராமன்
நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டர்கள் மட்டுமின்றி ஒருசில அதிமுக பிரபலங்களும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனை அடுத்து அதிமுகவின் ஒற்றை தலைமையை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமை பிடிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து பேட்டி அளித்த போது ’அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என்றும் தமிழக மக்களுக்கு நான்காண்டு நல்லாட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் ஏகமனதாக அதிமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். இவரது பெட்டி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.