தமிழ்நாடு

“திமுக சொன்னது உண்மையாயிடுச்சு!”- பொள்ளாச்சி வழக்கில் அதிமுகவை விளாசிய கனிமொழி

Published

on

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று சிபிஐ தரப்பு, இந்த வழக்கில் சம்பந்தம் உடையவர்களாக கருதி மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது. அருளானந்தம், பைக் பாபு மற்றும் கெரோன்பவுல் என்பவர்களைத்தான் சிபிஐ, தற்போது கைது செய்துள்ளது. இதில் அருளானந்தம் அதிமுக பிரமுகர் ஆவார். இந்த சம்பவத்திற்கும் அதிமுக தரப்புக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கை குறித்து கனிமொழி, ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுகவின் மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending

Exit mobile version