தமிழ்நாடு
சசிகலா வரவேற்பு நிகழ்ச்சி: காவல்துறை அனுமதி மறுப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான நிலையில், அவர் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறினார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னை வரும் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் மட்டுமின்றி அதிமுகவினரும் சிலரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சசிகலாவை வரவேற்க போரூர் உள்பட 12 இடங்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவை வரவேற்க நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் சசிகலாவுக்கு ஆதரவாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பதும், அவற்றில் சில போஸ்டர்களில் அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிமட்ட தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி சுயநலமில்லாமல் கழகத்தை காத்து, இக்கழகம் இன்னும் நூற்றாண்டு காலம் ஆட்சி அமைத்து அம்மாவின் கனவை நினைவாக்க வரும் கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவியே வருக என போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதை அடுத்து அதிமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி இல்லை என்று கூறியதை அடுத்து இது குறித்து நீதிமன்றம் செல்லவும் அமமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது