தமிழ்நாடு
தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்
ஈரோடு: ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
இதனால் தற்போது கொங்கு மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. தங்கள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
சேலத்தில் மட்டும் நடந்து வந்த போராட்டம் திருவண்ணாமலை, திருப்பூர், கோவை என்று அருகருகே இருக்கும் மாவட்டங்களுக்கும் பரவியது. ஈரோடு மாவட்ட விவசாயிகளும் அதன்பின் போராட்டத்தில் குதித்தனர். இதனால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.