தமிழ்நாடு
தீண்டாமை விவகாரம்: ரோகினி தியேட்டருக்கு காவல்துறை நோட்டீஸ்!
![Rohini Theatre issue - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/Rohini-Theatre-issue.jpg)
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால் பலரும் தியேட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
![Rohini-Theater - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/Rohini-Theater-1024x768.jpg)
தியேட்டர் நிர்வாகத்தின் இந்த தீண்டாமை செயலை நடிகர் கமல், இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் கண்டித்து பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் நரிக்குறவர் சமூகத்தினரை அனுமதிக்க மறுத்த காசாளர் ராமலிங்கம், காவலாளி குமரேசன் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், அனுமதி மறுத்த அவர்கள் இரண்டு பேருக்கும் போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பி எதற்காக நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்று மதுரவாயில் உதவி காவல் ஆணையர் ரமேஷ் பாபு முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் நரிக்குறவர் மக்களுக்காக குரல் கொடுத்த அந்த இளைஞருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.