தமிழ்நாடு
மீண்டும் ஒரு கட்டிட விபத்து: மதுரை காவலர் பரிதாப பலி!
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மதுரையில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள கீழவெளி வீதியில் சரவணன் என்ற காவலர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் அங்கிருந்த பழைய கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனை அடுத்து இடிபாடுகளில் சிக்கிய சரவணன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்ற காவலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஒரு பழைய கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் காவலர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பழைய பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து இடித்து வருவது போல் மற்ற பழைய கட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.