தமிழ்நாடு
ஒபிஎஸ், ஈபிஎஸ் உள்பட 250 பேர்கள் மீது வழக்குப்பதிவு: போலீஸார் அதிரடி!
![ops eps5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/ops-eps5.jpg)
முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 250 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து ராயப்பேட்டை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 250 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நோய்தொற்று தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் அவசிய தேவை இன்றி மற்ற விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வாகனங்களை பயன்படுத்த கூடாது என்ற விதிகள் இருக்கும் நிலையில் விதிகளை மீறி அதிமுக கூட்டம் கூட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.