தமிழ்நாடு
சூர்யாவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பாமக: வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு குரு என்ற பெயரை வைத்தது தங்கள் கட்சியின் பிரமுகரான காடுவெட்டி குருவை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இது குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி அவர்கள் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார் என்பதும் அந்த கடிதத்திற்கு சூர்யா பதில் அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யா பாமக பிரமுகரை இழிவுபடுத்தியதற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என பாமக பிரமுகர் அருள்மொழி என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே சூர்யாவை தாக்கினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் பழனிசாமி என்பவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.