தமிழ்நாடு
பாமகவின் 3வது தலைவரானார் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்து கூறிய ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது இளைஞரான அன்புமணி பாமகவின் தலைவராக பதவி ஏற்றதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணியை ஒருமனதாக பாமக நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இது குறித்து அறிவிப்பு வெளியானதும் பாமக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாசை ஜிகே மணி முன்மொழிய பாமக நிர்வாகிகள் வழிமொழிந்தனர். இதனை அடுத்து முறைப்படி அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கடந்த 2004 முதல் 2009 வரை இருந்த அன்புமணி பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். அதேபோல் 108 ஆம்புலன்ஸ் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறதே தவிர தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்படவில்லை/ இதனை அடுத்து தற்போது புதிய தலைவராக இருக்கும் அன்புமணி வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவை ஆட்சியில் அமர்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.