தமிழ்நாடு
மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: பாமக தேர்தல் அறிக்கை
அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு 23 தொகுதிகள் பெற்ற பாமக, அடுத்த கட்டமாக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையில் மாம்பழம், தாமரை மற்றும் இரட்டை இலை ஆகிய சின்னங்கள் உள்ளன என்பதும் தேமுதிகவின் முரசு சின்னம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாமாவின் தேர்தல் அறிக்கையில் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்கம் மீதான இறக்குமதி வரி, பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி மிகு தமிழகம் படைப்போம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் கல்வி நீர் மேலாண்மை, வேளாண்மை, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன், போக்குவரத்து உட்கட்டமைப்பு, மின்சாரம், சிறுபான்மையினர் பழங்குடியினர் நலன் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் உறுதி கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தமிழர்களின் வளர்ச்சியே தமிழர்களின் மகிழ்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.