தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதன்முதலாக ஓட்டுநரே இல்லாத ரயில் சேவை இன்று துவக்கம்!!
நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநரே இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
டெல்லி மெட்ரோ ரயிலில் சராசரியாக தினமும் 26 லட்சத்துக்கு அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். இந்த ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, அதில் தற்போது டிரைவர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், டி.எம்.ஆர்.சியின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட மெஜந்தா லைன் மற்றும் பிங்க் லைனில் இயக்கப்பட உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். மேலும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கி உள்ள பயணிகளுக்கு தேசிய பொது பயண அட்டையையும் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த தேசிய பொது பயண அட்டை மூலம் விமான நிலைய வழியில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன் இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், மற்ற வழிகளில் பயணம் செய்வதற்கான கட்டணம், வாகன நிறுத்துமிட கட்டணம் மற்றும் சில்லரை வர்த்தகம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம்.