இந்தியா
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஈபிஎஸ்-க்கு பதிலாக கலந்து கொண்டது யார்?
![Modi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Modi.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை செய்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஈபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கி வரும் இந்த கூட்டம் முடிவடைந்த உடன் மத்திய அரசிடமிருந்து ஒருசில அறிவிப்புகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால் உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.