இந்தியா

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி; என்ன பேசினார்கள்?

Published

on

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாதது போல், 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நான்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று போன் மூலம் உரையாடினார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோருடன் போன் மூலம் உரையாடிய மோடி, அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

நேற்று தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்து முக்கிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான ஆக்ஸிஜன் சப்ளை என்பது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஒரு நாளில் தமிழகத்தில் 440 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டே வாரத்தில் இந்த அளவு மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மட்டுமே வழ்ங்க முன் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடந்து ஆலோசனைகளை அடுத்து, 476 மெட்ரிக் டன் அளவுக்கு தமிழகத்துக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதாக சம்மதிக்கப்பட்டது. இதற்கு உண்டான உரிய ஆணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பல குழப்பங்கள் எழுந்துள்ளன.

எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு முறையான புதிய ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்து இருந்தார்.

இப்படியான நெருக்கடியான சூழலில் ஸ்டாலினுடன் உரையாடிய மோடி, கொரோனா நெருக்கடிகள் குறித்து கேட்டுள்ளார். விரைவில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version