தமிழ்நாடு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பிரதமரும் தமிழக முதல்வரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கணும்!
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதலில் இந்தியப் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போதும் மக்களுக்கு இன்னும் அந்த தடுப்பூசியின் மேல் நம்பிக்கை வரவில்லை என்ற கருத்தே நிலவுகிறது. இந்த சூழலில் மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசியை அளித்துவிட்டு அதன் பின்னர் தலைவர்களும் அதிகாரிகளும் ஊசி போட்டுக் கொள்ளலாம் எனப் பிரதமர் அறிவித்தது மேலும் சலசலப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு என்றும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியதால் மக்களின் அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், “பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அவர்கள் இருவரும் முதலில் நடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் தயார் என்றால் நாங்களும் தயார்!” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் எந்பது குறிப்பிடத்தக்கது.