தமிழ்நாடு
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை மாத இறுதியில் மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். எனவே இம்மாதம் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் அதன் பின்னர் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க பட்டதாக உரிய ஆதாரத்துடன் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்விக்கான புதிய திட்டங்கள் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் கிடைத்துவிடும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆகஸ்ட் 1முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதை அடுத்து இம்மாத இறுதிக்குள் பிளஸ் டூ மதிப்பெண் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.