செய்திகள்
இனிமேல் PhonePe-யில் ரீசார்ஜ் செய்தால் கட்டணம்…வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…
செல்போன் வந்த போதே அதற்கு ரீ சார்ஜ் செய்வது கட்டாயமானது. ஒரு மாதம், 2 மாதம், 3 மாதம் முதல் 2 வருடம் வரை பல திட்டங்களை அந்தந்த நெட்வொர்க் நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. அதிலும், ஸ்மார்ட்போன் வந்த பின் இண்டர்நெட் வசதிக்கும் சேர்த்து பணம் செலுத்தி வருகிறோம்.
அதேபோல், முன்பெல்லாம் ரீ சார்ஜ் செய்ய வேண்டுமானால் கடைகளுக்கு சென்று பணம் கொடுத்து செய்வோம். ஆனால், தற்போது ஸ்மார்ட்போனில் எல்லோரிடம் நெட் இருப்பதால் Amazon மற்றும் PhonePe, Google Pay உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தும் App-களின் மூலமாக பலரும் ரீச்சார்ஜ் செய்து விடுகிறார்கள். இதற்கு என தனிக்கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால், PhonePe ஆப் ரீச்சார்ஜ் செய்வதை கட்டணமாக்கியுள்ளது. ரூ.50 முதல் 100 வரை செல்போன் ரீ சார்ஜ் செய்தால் சேவைக்கட்டணமாக ரூ.1 வசூல் செய்யப்படும் எனவும், ரூ.100க்கு மேல் ரீ சார்ஜ் செய்தால் ரூ.2 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இது அந்த செயலியை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்து வந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PhonePe-ஐ தொடர்ந்து மற்ற ஆப்களும் கட்டணம் வசூலிக்க துவங்கி விடுமோ என்கிற கலக்கமும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.