இந்தியா
பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும்!
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்ந்து வரும் இந்த பெட்ரோலின் விலை மோடி அரசின் ஆட்சியில் விரைவில் 100 ரூபாயைத் தாண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த போது மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், பெட்ரோல் டீசல் விலையேற்றத்தையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியையும் குறித்து மிகக்கடுமையாக விமர்சித்தார்.
பல்வேறு அரசியல் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து விலை உயர்வு நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எதற்கும் பலனளிக்காமல் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சந்திரபாபு நாயுடு, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை பெரிய பிரச்சினைகளாக உள்ளது. மோடி ஆட்சியின் கீழ் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக உயர்ந்துவிடும். அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக வீழ்ச்சியடையும் என்றார்.