சினிமா செய்திகள்
பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு – வைரமுத்துவுக்கு அனுப்பப்பட்ட ‘குபீர் சிரிப்பு’ கவிதை!
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் நிலையில் உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் என்பது மறைமுகமாக அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் வித்திடும் என்பதால், சாமனிய மக்கள் அதிகம் கவலை கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசு, அதைக் குறைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் சமையல் செய்ய பயன்படும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
இப்படியான சூழலில் கவிஞர் வைரமுத்துவுக்கு, பெட்ரோல் விலையேற்றத்தை பகடி செய்து அவர் எழுதிய பாடல் வரியை உல்டா செய்து அனுப்பி உள்ளனர்.
இயற்கை படத்தில் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்’ என்று பாடல் வரியை எழுதியிருப்பார் வைரமுத்து.
அதை ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்று அவருக்கே மாற்றி அனுப்பியுள்ளனர். இதை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.