இந்தியா
பட்ஜெட்டில் வரி விதிப்பு: விலை உயரும் பெட்ரோல், டீசல்!
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறை தனது ஆட்சியை அமைத்துள்ளது. இதில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இவர் தனது 2019-20-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மற்றும் சாலை கட்டுமான வரி லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இந்த வரி உயர்வால் 28000 கோடி ரூபாய் வரையில் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரி உயர்வு அறிவிப்பால் பெட்ரோலின் விலை 2.5 ரூபாய் மற்றும் டீசல் விலை 2.3 ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73.19 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 67.96 ரூபாயாகவும் இருந்தது. கலால் வரி உயர்த்தப்படுவதால் பெட்ரோல் விலை 75.69 ரூபாயாகவும், டீசல் விலை 70.26 ரூபாயாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெட்ரோல் மீது கலால் வரியாக மொத்தம் 17.98 ரூபாயும், டீசல் மீது கலால் வரி 13.83 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு மாநிலத்திலும் மதிப்புக் கூட்டு வரியாகக் குறிப்பிடத்தகுந்த வரி வசூலிக்கப்படுகிறது. மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இதுவரையில் 9 முறை பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு முறை மட்டுமே இவற்றின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.