தமிழ்நாடு
ரூ.100ஐ தாண்டியும் இன்னும் விலை உயரும் பெட்ரோல்: சென்னையில் இன்றைய விலை!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்ததுள்ளதாகவும், இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.44 என்ற விலையில் விற்பனை ஆகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 19 காசுகள் அதிகரித்ததுள்ளதாகவும், இதனால் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே ரீதியில் சென்றால் பெட்ரோலை அடுத்து டீசலும் விரைவில் செஞ்சுரி அடிக்கும் என அஞ்சப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மாநில அரசும் மத்திய அரசும் விதித்துள்ள அதிகப்படியான வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மாநில, மத்திய அரசுகள் இதனை கண்டுகொள்ளாமல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை வேடிக்கை பார்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.